இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்வி கண்டு வரும் நிலையில் அதற்கு பொறுப்பேற்று சனத் ஜயசூர்யா தலைமையிலான இலங்கை தேர்வுக் குழுவினர் ராஜிநாமா செய்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சருக்கு ஜயசூர்யா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்வுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆலோசித்து ராஜிநாமா செய்வது என ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்.
நம்முடைய ரசிகர்களே நமது வீரர்கள் மீது பிளாஸ்டிக் பாட்டில்களை வீசியது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த ஆண்டு மிகுந்த ஏமாற்றமளிக்கக்கூடிய ஆண்டாக அமைந்துவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது மறக்க முடியாத விஷயமாகும். நமது அணியில் ஏராளமான திறமைசாலிகள் இருக்கிறார்கள். அதனால் நமது அணி விரைவில் உச்சத்தை எட்டும். தேவைப்படும்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தொடர் முடியும் வரையில் தேர்வுக்குழுவினர் தங்களுடைய பதவியில் நீடிப்பார்கள்.