இந்தியா - இலங்கை அணிகள்தான் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. ஆனால் ஆடுகளத்தைத் தயார் செய்வதிலிருந்து வீரர்கள் தேர்வு வரை தென் ஆப்பிரிக்கத் தொடரை மனத்தில் கொண்டு திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ. தெ.ஆ. தொடருக்குத் தயாராவதற்காக இந்தத் தொடரில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கை அணியினரைப் பாதிக்கிறதா? தங்களை அவமானப்படுத்துவது போல அவர்கள் உணர்கிறார்களா? இக்கேள்விக்கு இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் கூறியதாவது:
இந்திய அணி அடுத்தத் தொடரை யோசித்து வருகிறது. ஆனால் நாங்கள் இந்தத் தொடரில்தான் கவனம் செலுத்துகிறோம். இந்தத் தொடரில் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் எப்படி ஜெயிக்கப்போகிறோம் என்பதில்தான் எங்களுடைய கவனம் இருக்கிறது. இந்திய அணியின் நடவடிக்கைகளை எங்களால் கட்டுப்படுத்தமுடியாது. எங்களால் என்ன செய்யமுடியுமோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இந்தத் தொடரில்தான் எங்கள் ஈடுபாடு உள்ளது என்று கூறியுள்ளார்.