இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முரளி விஜய், விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது.
முதல்நாள் ஆட்டநேர இறுதியில் முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது கோலி 156 ரன்களுடன் களத்தில் நின்றார்.
இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த விராட் கோலி, இரட்டைச் சதம் விளாசினார். மேலும், நடப்புத் தொடரிலேயே அடுத்தடுத்து 2 இரட்டைச் சதங்களை விளாசி புது சாதனையும் படைத்தார்.
இதனால் 2-ஆம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் குவித்துள்ளது. அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா 65 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 225 ரன்களுடன் களத்தில் உள்ளார்.