தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.
ஜனவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை முதல் டெஸ்ட், ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் மற்றும் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. இதனிடையே இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பாக பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவைச் சேர்ந்த 3 பேர் கலந்துகொண்ட கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அணி விவரம் பின்வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பார்திவ் படேல், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.