இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஹிமாசல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவன் டக்-அவுட்டாக, 2 ரன்களில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் டக்-அவுட்டானார். மணீஷ் பாண்டே 2, ஹார்திக் பாண்டியா 10, புவனேஸ்வர் குமார் பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்நிலையில், ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நங்கூரமாய் நின்ற தோனி, ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார்.
சற்று தாக்குபிடித்த குல்தீப் யாதவும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, பும்ராவும் டக்-அவுட்டாக, தோனி அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். மொத்தம் 87 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரி, 2 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 65 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இதன்காரணமாக இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தரப்பில் அற்புதமாக பந்துவீசிய லக்மல் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேத்யூஸ், பெரேரா, தனஞ்ஜெயா, பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.