மொகாலி: மொகாலியில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கினைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதன்கிழமை நடக்கிறது. தொடரை இழப்பதைத் தவிர்க்க வேண்டுமானால் இந்தியா இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தற்பொழுது பேட்டிங் செய்துவருகிறது.
இந்திய அணியில் முதன்முறையாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். 'சைனாமென்' சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சொந்த மண்ணில் இலங்கையுடன் ஒரு நாள் தொடரை இந்தியா இதுவரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.