தொடங்கியது டி10 லீக்: ஹாட்ரிக்கில் அசத்திய அஃப்ரிடி! சேவாக் அணி படுதோல்வி!

5-வது ஓவரை வீச வந்த அஃப்ரிடி முதல் மூன்று பந்துகளில் விக்கெட்டுகள் எடுத்து ஹாட்ரிக் நிகழ்த்தினார்...
தொடங்கியது டி10 லீக்: ஹாட்ரிக்கில் அசத்திய அஃப்ரிடி! சேவாக் அணி படுதோல்வி!

ஐந்து நாள் கிரிக்கெட், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக வேறொரு வடிவம் எடுத்தது. பிறகு டி20 கிரிக்கெட், ஆரம்பித்த வேகத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றங்களால் கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் கிடைத்தன. இப்போது 10 ஓவர் கிரிக்கெட் அமலுக்கு வந்துள்ளது.

நேற்று தொடங்கிய டி10 லீக் போட்டியில் இந்தியாவின் சேவாக் அணி தோல்வியடைந்தது. பேட்டிங்கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஃப்ரிடி, பெளலிங்கில் ஹாட்ரிக் எடுத்தார். 

டி10 லீக் என்றால் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஷாஜி உல் முல்க், இந்த 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஷார்ஜாவில் நடத்தி வருகிறார். நேற்று முதல் டி10 கிரிக்கெட் லீக் போட்டி (டி10 லீக்) தொடங்கியுள்ளது. டி10 லீக் போட்டியை நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கங்களும் இப்போட்டியை அங்கீகரித்துள்ளன. ஐபிஎல் போட்டியை பிசிசிஐ நடத்துவதுபோல டி10 லீக் போட்டியை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம் அங்கீகரித்துள்ளது. மராத்தா அராபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், பாக்தூன்ஸ், கேரளா கிங்ஸ், இலங்கை அணி ஆகிய 6 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. 

இந்தப் போட்டியின் ஒவ்வொரு ஆட்டங்களும் 90 நிமிடங்கள் நடக்கும். 10 ஓவர்கள் மட்டுமே ஓர் அணிக்கு வழங்கப்படும். சேவாக், கிரோன் பொலார்ட், சுனில் நரைன், முகமது அமீர், சகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சங்கக்காரா, சாகித் அஃப்ரிடி, சர்ஃபராஸ் அகமது, ஃபகார் ஜமான், டேரன் சாமி, அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற பிரபல வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், மே.இ. வீரர்கள் ஆகிய அணிகளில் இருந்து பெரும்பாலான வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்தப் போட்டியில் முன்னாள் வீரர் சேவாக் கலந்துகொள்ளவுள்ளார். மராத்தா அராபியன்ஸ் அணியின் கேப்டனாக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கக்காரா, ஃபகார் ஜமான் போன்ற பிரபல வீரர்கள் இந்த அணியில் உள்ளார்கள். இந்த அணியின் ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்கால் டைகர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா கிங்ஸ் அணியில் கிரோன் பொலார்ட், சகில் அல் ஹசன், இயன் மார்கன், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். பெங்கால் டைகர் அணியில் சுனில் நரேன் இணைந்துள்ளார். இலங்கை அணி என்கிற பெயர் கொண்ட அணியை தினேஷ் சண்டிமல் வழிநடத்துகிறார். பாக்தூன்ஸ் அணியில் அஃப்ரிடி இடம்பிடித்துள்ளார்.

டிசம்பர் 17 அன்று இந்திய நேரம் 11 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

போட்டி தொடங்கியது

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் டைகர்ஸ், கேரளா கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேரள அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

10 ஓவர்களும் பிளெட்சர், சார்லஸ், மில்லர் என மூன்று வீரர்கள்தான் விளையாடினார்கள். 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சார்லஸ் ஆட்டமிழந்தார். பிளெட்சர் 24 பந்துகளில் 32 ரன்களும் மில்லர் 9 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தார்கள். ஆளுக்கு தலா ஒன்று என மொத்தமே 3 சிக்ஸர்கள்தான் அடிக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் பெங்கால் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. வஹாப் ரியாஸ் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

60 பந்துகளில் 87 ரன்கள் என்பது எளிதான இலக்குதான். இதனால் பெரிய சிரமங்கள் இன்றி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90  ரன்கள் எடுத்து டிசிஎஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் வெற்றிவாகை சூடியது கேரள அணி. அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஐயர்லாந்தைச் சேர்ந்த 27 வயது பால் ஸ்டிர்லிங் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மார்கன், பொல்லார்ட் தலா 11 ரன்கள் எடுத்தார்கள். முதல் ஓவரிலேயே வால்டனின் விக்கெட்டை ஆமீர் யாமின் வீழ்த்தினாலும் பெங்கால் அணியால் கேரள அணியின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. டி லேங்கே 2 ஓவர்களில் 36 ரன்கள் வாரி வழங்கி அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக விளங்கினார். 

இந்த வெற்றியின்மூலம் கேரள அணி 2 புள்ளிகள் பெற்றது. 

ஹாட்ரிக் அஃப்ரிடி!

2-வது போட்டியில் பாக்தூன்ஸ், மராத்தா அராபியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. பாக்தூன்ஸ் அணிக்கு அப்ரிடியும் மராத்தா அணிக்கு இந்தியாவின் சேவாக்கும் கேப்டனாக உள்ளார்கள். டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார் சேவாக்.

அஃப்ர்டி அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஃபகார் ஜமான், டாசன் ஆகியோர் முறையே 45, 44 ரன்கள் எடுத்து சேவாக் அணியைத் தடுமாற வைத்தார்கள். கடைசியில் ஆட வந்த அஃப்ரிடி 6 பந்துகளில் 1 சிக்ஸர் உள்பட 10 ரன்கள் எடுத்தார். அஃப்ரிடி அணி மொத்தம் 9 சிக்ஸர்கள் அடித்தது.

கடினமான இலக்கை எதிர்கொண்ட சேவாக் அணியில் ஹேல்ஸ் தவிர பேட்டிங் செய்த பலரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தார்கள். ஹேல்ஸ் 26 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். 5-வது ஓவரை வீச வந்த அஃப்ரிடி முதல் மூன்று பந்துகளில் விக்கெட்டுகள் எடுத்து ஹாட்ரிக் நிகழ்த்தினார். ரோசோவ், பிரோவோ, சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஃப்ரிடி. மராத்தா அராபியன்ஸ் 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள்தான் எடுத்தது. இதனால் அஃப்ரிடி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com