ராகுல் அரைசதம், தோனி-பாண்டே ஜோடி அதிரடி: இந்தியா 180 ரன்கள் குவிப்பு
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இதுவரை 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதியுள்ளது. இந்த இரண்டிலுமே இந்தியா தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக துவக்க வீரர் ராகுல், 48 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோஹித் ஷர்மா 17, ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தோனி, பாண்டே ஜோடி அதிரடியாக ஆடியது.
தோனி 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 39 ரன்களும், பாண்டே 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 32 ரன்களும் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் மேத்யூஸ், பெரேரா, பிரதீப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.