தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் கலந்துகொள்ளும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புதன்கிழமை புறப்பட்டது.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
நான் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகிக்கொண்டேன். இருப்பினும் மறுபடி கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைவது எனக்கு ஒன்றும் கடினம் இல்லை. ஏனென்றால் கிரிக்கெட் என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது.
நாங்கள் கிரிக்கெட் விளையாட மட்டும்தான் தென் ஆப்பிரிக்கா செல்கிறோம். அதை விடுத்து யாருக்காகவும் எதையும் சாதித்துக்காட்டச் செல்லவில்லை. வீரர்களாகிய நாங்கள் அனைவரும் இந்தியாவுக்காக எங்கள் 100 சதவீத அற்பணிப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.
முன்னதாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து தனது திருமணத்துக்காக விராட் கோலி, விலகியிருந்தார். டிசம்பர் 11-ந் தேதி இத்தாலியில் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து டிசம்பர் 26-ந் தேதி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.