ஹைதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று தேனீர் இடைவேளையின் பொழுது இந்தியா இரண்டு விக்கட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைதொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜய், கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
அதில் ராகுல் வந்த வேகத்திலேயே முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்து வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது பந்துவீச்சில் போலடாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய புஜாரா, முரளி விஜய்யுடன் இணைந்து பொறுப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தினால் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (45), புஜாரா (39) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்டந்த இருவரும் தங்களது அரை சதத்தை நிறைவு செய்தனர். ஆனால் அதற்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் மெஹ்தி ஹாசன் மிராஸ் பந்து வீச்சில் புஜாரா ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 178 ரன்களை குவித்தனர்.
அதற்கு பிறகு முரளி விஜயுடன் அணித்தலைவர் விராட் கோலி இணைந்தார். இந்த இருவரும் சேர்ந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
தேனீர் இடைவெளையின் பொழுது இந்தியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 98 ரன்களுடனும், விராத் கோலி 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.