ஆசிய ரக்பி செவன் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
லாவ்ஸ் தலைநகர் வியன்டியான் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா, பிலிப்பின்ஸ், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், லாவ்ஸ் என மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன.
ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 22-7 என்ற புள்ளிகள் கணக்கில் லாவ்ஸ் அணியையும், 12-5 என்ற புள்ளிகள் கணக்கில் பிலிப்பின்ஸ் அணியையும், 43-0 என்ற கணக்கில் நேபாளத்தையும், 26-12 என்ற கணக்கில் மலேசியாவையும் தோற்கடித்தது.
2-ஆவது நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆனால் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 0-29 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோற்றது. இதனால் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.