இந்திய கேப்டன் விராட் கோலியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டக்கில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்திய அணியின் முதுகெலும்பாகத் திகழும் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதில் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் திட்டமாக இருக்கிறது. இதற்கேற்றாற்போல், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால், பிபிசி வானொலி 5-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களைப் பொருத்த வரை, அவரை (விராட் கோலியை) நிலைத்த ஆட அனுமதிக்க மாட்டோம். விராட் கோலி ஒரு வியத்தகு வீரர். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அவரது அபாரத் திறமையை நாங்கள் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
எனவே, கோலிக்காக நாங்கள் சில வியூகங்களை வகுத்துள்ளோம். இத்திட்டத்தை நன்றாக செயல்படுத்த பயிற்சி எடுத்து வருகிறோம் என்றார் அவர்.