மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 14- ஆவது ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இங்கிலாந்தின் டெர்பி நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வீழ்ந்தது.
முன்னதாக, முதலில் பேட் செய்த இந்திய அணியில் தீப்தி சர்மா அதிகபட்சமாக 110 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் மிதாலி ராஜ் 78 பந்துகளுக்கு 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார்.
வேதா 29, ஹர்மன்பிரீத் 20, பூனம் ராவத் 16, ஸ்மிருதி மந்தனா 8, ஜுலன் கோஸ்வாமி 9, மான்சி 2 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது இந்தியா. சுஷ்மா 11 ரன்களுடனும், எக்தா பீஷித் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சிறிபள்ளி வீரக்கொடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இலங்கை அணியில் திலானி மனோதரா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். சசிகலா 37, சமாரி அட்டப்பட்டு 25 ரன்கள் எடுத்தனர். இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது இலங்கை. வீரக்கொடி 21, ஒஷாதி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் ஜுலன் கோஸ்வாமி, பூனம் ராவத் தலா 2 விக்கெட்டுகளும், எக்தா பீஷித், தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தீப்தி சர்மா ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து வெற்றி: இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இங்கிலாந்து, 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.