22-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 4-ஆவது நாளில் இந்தியாவின் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன், 5,000 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்த நிலையில், இப்போது 10,000 மீ. ஓட்டத்திலும் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 10,000 மீ. ஓட்டத்தில் லட்சுமணன் 29 நிமிடம், 55.87 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதேபிரிவில் மற்றொரு இந்தியரான கோபி வெள்ளி (29:58.89) வென்றார்.
மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மான் 5,942 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஜப்பானின் மெக் ஹெம்பிள் 5,883 புள்ளிகளுடன் வெள்ளியும், இந்தியாவின் ஹெம்ப்ராம் 5,798 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் (1.50.07) வெண்கலம் வென்றார்.
அர்ச்சனாவின் தங்கம் பறிப்பு: மகளிர் 800 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா 2 நிமிடம், 2 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றதோடு, தனது "பெர்சனல் பெஸ்டை'யும் பதிவு செய்தார். ஆனால் அவர் தனக்கு பின்னால் வந்த இலங்கை வீராங்கனைகளை முன்னேறவிடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் இலங்கை வீராங்கனைகள் நிமாலி வாலிவர்ஷா (2:05.23) தங்கமும், கயந்திகா துஷாரி (2:05.27) வெள்ளியும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதேபிரிவில் பங்கேற்ற இந்தியாவின் தின்டு லூக்கா உடல்நலக்குறைவால் 2-ஆவது சுற்றிலேயே போட்டியிலிருந்து விலகினார்.