இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி கூறியதாவது:
இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது குறித்து மிகவும் ஆவலாக உள்ளோம். இந்த தொடர் நிச்சயம் எங்களுக்கு கடுமையான சவாலை அளிக்கும். இருப்பினும் இந்த டெஸ்ட் தொடரை வென்று தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நாளை தொடங்கி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. அவர் இன்னும் கொழும்புவிலேயே தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார்.
ராகுல் ஒரு சிறப்பான வீரர். இந்திய அணிக்கு பல தொடர்களில் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். கடுமையான போட்டிகளாக இருந்தாலும் அவருடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும். ஏற்கனவே காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முரளி விஜய் விலகியுள்ளார்.
ஆனால், இது எங்களுக்கு எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தாது. இதர வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இதை சிறந்த வாய்ப்பாக கருத வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவை இதுவரை துவக்க வீரராக களமிறக்கியதில்லை.
மேலும், அணிக்கு தேவையான துவக்க வீரர்கள் உள்ளனர். எனவே அவர்கள் தான் இப்போட்டியிலும் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அதுபோல ஹார்திக் பாண்டியா என்ற அற்புத வீரர் அணியில் உள்ளார். தக்க சமயத்தில் விக்கெட் வீழ்த்தவும், ரன்குவிக்கும் வல்லமை பெற்றவர்.
எனவே காலே டெஸ்டில் பாண்டியா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாட நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.