இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் வைரஸ் காய்ச்சல் காரணமாக விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கே.எல்.ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை பிசிசிஐ மருத்துவர்கள் குழு உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் அவருடைய உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. அதனால் அவர் வரும் புதன்கிழமை காலேவில் தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அரை சதமடித்த ராகுல், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றாக அமைந்துள்ளது. அவர், இந்திய அணியினருடன் காலேவுக்கு செல்லவில்லை. தொடர்ந்து கொழும்பிலேயே தங்கியிருக்கிறார்.
கே.எல்.ராகுல் விலகியிருப்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவனும், அபிநவ் முகுந்தும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.