ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஏலத்துக்கு வருகிறது.
கடந்த 1952-ஆம் ஆண்டு ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் காஷாபா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். கடந்த 1984-ஆம் ஆண்டு அவர் காலமான நிலையில், அவரது பெயரில் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் மல்யுத்த அகாதெமி அமைக்கப்படும் என்று 2009-ஆம் ஆண்டில் அப்போதைய மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் திலிப் தேஷ்முக் அறிவித்திருந்தார்.
2013-ஆம் ஆண்டில் அந்தப் பணிகளுக்காக ரூ.1.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், உரிய பணிகள் நடைபெறவில்லை எனக் கூறும் அவரது மகன் ரஞ்சித் ஜாதவ், கட்டுமானப் பணிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தனது தந்தை வென்ற பதக்கத்தை ஏலத்தில் விடுவதாக கூறியுள்ளார்.