பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மூன்று பேர் கர்நாடகாவில் கைது!

இந்திய மண்ணில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவது ஆபத்தான போக்காகும்...
பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மூன்று பேர் கர்நாடகாவில் கைது!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்தப் போட்டி முடிவடைந்தவுடன் கர்நாடகாவில் உள்ள மூன்று இளைஞர்கள் பாகிஸ்தானின் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். குடகு மாவட்டத்தின் சுண்டிகொப்பா காவல்நிலையம் எல்லைக்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ரியாஷ், ஷாஹைர், அப்துல் சமான் ஆகிய மூன்று இளைஞர்களும் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதையடுத்து உள்ளூர் பிஜேபி கட்சி உறுப்பினரான செங்கப்பா, சுண்டிகொப்பா காவல்நிலையத்தில் அந்த இளைஞர்கள் மீது புகார் அளித்தார்.

இதையடுத்து மூன்று இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது: மூவரும் எந்தக் கட்சியும் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்கள். இதை அருகில் இருந்தவர்கள் கண்டித்துள்ளார்கள். இதையடுத்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 

குடகுப் பகுதி பாஜகவைச் சேர்ந்த பரதீஸ் கூறியதாவது: இந்திய மண்ணில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவது ஆபத்தான போக்காகும். இவை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

இளைஞர்கள் தரப்பில் சமாதானம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மூன்று இளைஞர்களும் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்பார்கள். இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் பாஜக தரப்பினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com