மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
போர்ட் ஆப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 103, கேப்டன் விராட் கோலி 87, ஷிகர் தவன் 63 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷாய் ஹோப் 81 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஹானே ஆட்டயநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் வரும் 30-ஆம் தேதி நார்த் சவுன்ட் நகரில் நடைபெறுகிறது.