மட்டம் தட்டிய ஜான் மெக்கன்ரோ: செரீனா வில்லியம்ஸ் பதில்! 

செரீனா வில்லியம்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆடியிருந்தால் தரவரிசையில் 700-வது இடத்தையே பிடித்திருப்பார் என்று... 
மட்டம் தட்டிய ஜான் மெக்கன்ரோ: செரீனா வில்லியம்ஸ் பதில்! 

செரீனா வில்லியம்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆடியிருந்தால் தரவரிசையில் 700-வது இடத்தையே பிடித்திருப்பார் என்று முன்னாள் வீரர் ஜான் மெக்கன்ரோவின் கருத்துக்கு செரீனா வில்லியம்ஸ் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க வானொலி அளித்த ஒரு பேட்டியில் முன்னாள் வீரர் ஜான் மெக்கன்ரோ, செரீனா வில்லியம்ஸ் குறித்து கூறியதாவது: பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதேசமயம் அவரை டென்னிஸ் விளையாட்டின் சிறந்த வீரராகக் குறிப்பிடமுடியாது. காரணம், அவர் ஆண்கள் பிரிவில் ஆட நேர்ந்திருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். ஆண்கள் பிரிவின் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் 700-வது இடத்தையே பிடிப்பார் என்று குறிப்பிட்டிருந்தார். 

இதில் உள்ள முரண், ஏடிபி தரவரிசை 500 வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 500-க்குள் மேல் தரவரிசை கிடையாது. தற்போது தரவரிசையின் முதல் இடத்தில் ஆண்டி முர்ரே உள்ளார். 500-வது கடைசி இடத்தில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தெமுர் இஸ்மாயிலோவ் உள்ளார்.

இந்நிலையில் மெக்கன்ரோவின் பேட்டியை அடுத்து சமூகவலைத்தளத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. சிறந்த வீராங்கனையான செரீனாவை மெக்கன்ரோ மட்டம் தட்டியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இதற்கு செரீனா பதிலளிக்கமாட்டார் என்றே பலரும் கருதினார்கள். ஆனால் மிகவும் பக்குவத்துடன் அவருக்குப் பதில் அளித்துள்ளார் செரீனா. 

இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் செரீனா வில்லியம்ஸ் கூறியதாவது: அன்பான ஜான் மெக்கன்ரோ, நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். ஆனால் தவறான ஆதாரங்களைக் கொண்ட உங்கள் கருத்திலிருந்து எனக்கு விலக்கு அளியுங்கள். நீங்கள் சொல்கிற தரவரிசையில் உள்ளவர்களுடன் நான் விளையாடியதில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. எனக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதால் என்னையும் என் தனிப்பட்ட வாழ்க்கையும் மதியுங்கள். நல்ல நாளாக அமையட்டும் என்று பதில் அளித்துள்ளார்.  

செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் கடந்த சிலமாதங்களாக அவர் எந்தப் போட்டியிலும் பங்குபெறவில்லை. 2018-ல் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்புவார். கடைசியாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதால் சமீபமாக அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாத கர்ப்பக் காலத்தில் இருந்துள்ளார். அந்த நிலையிலும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆகியுள்ளார்.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com