பிரபல செல்போன் நிறுவனமான விவோ, ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக நீடிக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அடுத்த 5 வருடங்களுக்கு விவோ நிறுவனம் பிசிசிஐ-க்கு ரூ. 2199 கோடி வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதையடுத்து 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக விவோ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2199 கோடி என்பது உண்மையிலேயே மிகப்பெரிய தொகை ஆகும். கடந்த ஒப்பந்தத்தை விடவும் 554 சதவிகிதம் அதிகம்!
ஏலத்தில் ஒப்போ நிறுவனமும் கலந்துகொண்டது. ஆனால் அந்த அணி 5 வருடங்களுக்கு ரூ. 1430 மட்டுமே வழங்க இருந்ததால் வாய்ப்பு மீண்டும் விவோ நிறுவனத்துக்கே சென்றுள்ளது.
ஐபிஎல் போட்டியின் முதல் விளம்பரதாரராக டிஎல்ஃப் 2008 முதல் 2012 வரை இருந்தது. இதன்பின்னர் பெப்சி நிறுவனம் ரூ. 396 கோடியில் 5 வருடங்களுக்கு ஐபிஎல் விளம்பரதாரராகத் தேர்வானது. ஆனால் 2016, 2017ம் வருடங்களில் பெப்சியிடமிருந்த ஒப்பந்தம் விவோ நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வருடத்துக்கு ரூ. 100 கோடி மட்டுமே வழங்கியது விவோ. தற்போது மீண்டும் அடுத்த 5 வருடங்களுக்கு ரூ. 2199 கோடி வழங்கி ஐபிஎல் விளம்பரதாரராக ஆகியுள்ளது விவோ செல்போன் நிறுவனம்.