சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இலங்கை அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியவில்லை. இதையடுத்து, வீரர்கள் சரியான உடற்தகுதியின்றி கூடுதல் எடையுடன் இருப்பதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா விமரிசனம் செய்தார்.
இதை முன்வைத்து பேட்டியளித்த மலிங்கா, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடியதில்லை. எனவே அவருடைய கருத்துகளை ஒரேடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன கவலை என்று அமைச்சரை விமரிசனம் செய்யும் விதமாகப் பேட்டியளித்திருந்தார்.
பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கவேண்டும் என்றால் மலிங்கா, இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் எவ்வித அனுமதியும் பெறாமல் பேட்டியளித்து ஒப்பந்தத்தை மீறியதற்காகவும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகராவைத் தவறான வார்த்தைகளால் விமரிசித்ததற்காகவும் மலிங்காவிடம் இலங்கை கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. அதன்முடிவில், மலிங்காவுக்கு ஓர் ஆண்டு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தத் தடை ஆறு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதங்களில் இதேபோன்றதொரு தவறை மீண்டும் செய்தால் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் மலிங்காவின் அடுத்த ஒருநாள் போட்டியில் அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தொகையிலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.