தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன், நேற்று பெற்ற ஒரு வெற்றி இந்திய டென்னிஸ் வட்டாரத்தையே அசைத்துவிட்டது.
ஒற்றையர் போட்டிகளில் இந்திய வீரர்கள் பெரிதளவில் முன்னேற்றம் காணாத ஒரு சூழலில் ராம்குமார் அசாத்தியமான ஒரு வெற்றியைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்று வரும் அண்டல்யா ஓபன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 222-ம் இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், உலக அளவில் எட்டாம் நிலையில் உள்ள டொமினிக் தீமைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். ராம்குமார் 6-3, 6-2 என்கிற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சமீபகால இந்திய டென்னிஸ் வரலாற்றில் ராம்குமாரின் இந்த வெற்றி மகத்தான இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வெற்றியை முன்வைத்து அவர் எப்படி தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையை நம்பிக்கையுடன் கொண்டுசெல்வார் என்பதில்தான் அவருடைய எதிர்கால வெற்றிகள் அடங்கியுள்ளன.