ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 1000-க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் வரும் ஜூலை 6 முதல் 9-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான வீரர்/வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2015-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் நடைபெற்ற கடந்த சீசனில் 40 நாடுகளைச் சேர்ந்த 497 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்த சீசனில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் இரட்டிப்பாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போட்டிக்காக கலிங்கா விளையாட்டு அரங்கத்தில், தடகள சம்மேளனங்களுக்கான சர்வதேச சங்கத்தின் (ஐஏஏஎஃப்) தர மதிப்பீடுகளை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச தரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள், போட்டி அட்டவணை, நேரலை குறிப்புகள், போட்டி முடிவுகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் அதிக ரசிகர்களைச் சென்றடையும் வகையில் சமூக வலைதளங்களில் முதலில் வெளியிடப்படவுள்ளன.