இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் தனது முதல் சதத்தை எடுத்துள்ளார். ஸ்மித்தின் 150 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. காயத்திலிருந்து மீண்ட முரளி விஜய் அணிக்குத் திரும்பினார். அபிநவ் முகுந்த் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்குப் பதிலாக கிளென் மேக்ஸ்வெல், பட் கம்மின்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 244 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 117, கிளென் மேக்ஸ்வெல் 147 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் அதிகம் தாமதிக்காமல் தனது முதல் சத்தை எட்டினார் மேக்ஸ்வெல். அவர் பிறகு ஜடேஜா பந்துவீச்சில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
116-வது ஓவரில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. மேத்யூ வேட், ஜடேஜா பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கம்மின்ஸும் அதே ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு ஸ்மித் 315 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.
2-ம் நாள் உணவு இடைவேளையின்போது 118 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ஸ்மித் 153 ரன்களுடனும் ஓ’கீஃப் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள்.