இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது.
காயம் காரணமாக கேப்டன் கோலி விலகியுள்ளார். இதனால் இளம் வீரரான 22 வயது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போட்டிகளில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ், துலிப் டிராபி, ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். சர்வதேசப் போட்டியில் விளையாடும் முதல் இந்திய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் குல்தீப் யாதவ்.
இன்றைய டெஸ்ட் போட்டியில் முதலில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பிறகு ஹேண்ட்ஸ்காம்ப், மேக்ஸ்வெல் ஆகியோரை க்ளீன் போல்ட் செய்து இந்திய அணிக்குப் பலம் அளித்தார். இதையடுத்து சச்சின் டெண்டுல்கர் குல்தீப்புக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
குல்தீப் யாதவின் பந்துவீச்சின் தன்மையும் அவர் தன் டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த விதமும் என்னை மிகவும் கவந்துள்ளன. இதேபோல சிறப்பாகப் பந்துவீசவேண்டும் குல்தீப். இது நீ பிரகாசிக்கும் டெஸ்ட் போட்டியாக இருக்கவேண்டும் என்றார்.