இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அந்த அணியினர், தர்மசாலாவில் உள்ள திபெத்திய மத குருவான தலாய் லாமாவை அவரது மடத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
இச்சந்திப்புக்குப் பிறகு ஸ்மித் பேசிய ஸ்மித், 'தலாய் லாமாவுடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. நிம்மதியாக உறங்குவது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் என்னை அருகில் அழைத்து ஆசி வழங்கினார். அவரது அந்த ஆசிகள், அடுத்த 5 நாள்களுக்கு எனக்கு நிம்மதியான உறக்கத்தை தரும் என நம்புகிறேன்' என்று கூறினார். முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணியினர் தலாய் லாமாவை சந்திக்க முயன்றபோது, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.