சிறந்த ஐபிஎல் கேப்டன் யார்? புதிய விவாதம் ஆரம்பம்!

ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன் தோனியா ரோஹித் சர்மாவா என்கிற விவாதம் கிளம்பியுள்ளது...
சிறந்த ஐபிஎல் கேப்டன் யார்? புதிய விவாதம் ஆரம்பம்!

ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி என்கிற பதில்தான் கிடைக்கும். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2010 மற்றும் 2011. ஆனால் 2008, 2012, 2013, 2015 ஆகிய நான்கு வருடங்களிலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார்கள் தோனி எதிர்ப்பாளர்கள்.

தற்போது தோனி பங்கேற்றுள்ள புணே அணியும் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து தோல்வியடைந்துள்ளது. இதனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏழு முறை பங்கேற்ற தோனி ஐந்துமுறை தோல்வியடைந்துள்ளார். மேலும் நேற்றைய வெற்றியோடு ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இதையடுத்து ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன் தோனியா ரோஹித் சர்மாவா என்கிற விவாதம் கிளம்பியுள்ளது.

தோனி அதிகமுறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினாலும் அதிக வெற்றிகள் ரோஹித் சர்மாவையே தேடிவந்துள்ளன. 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை இண்டியன்ஸ். முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது.

தோனியை விடவும் ரோஹித் சர்மா நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்-லில் மூன்றுமுறை கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்கிற பெருமையையும் ரோஹித் சர்மா அடைந்துள்ளார். யூசுப் பதான், மலிங்கா, போலார்ட், ராயுடு ஆகிய வீரர்களும் மூன்றுமுறை இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மும்பை அணியில் தற்போதுள்ள வீரர்களில் கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் போலார்ட், அம்பட்டி ராயுடு ஆகியோர் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றபோது இடம்பெற்றிருந்தனர். ஆனால் தோனியோ, இவர்களுக்குப் பின்னால் இரு வெற்றிகளுடன் உள்ளார்.

புணே அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 7-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் களமிறங்கினார். 2008 முதல் 2017 வரையிலான காலங்களில் 7 முறை இறுதிச் சுற்றில் விளையாடியிருக்கிறார் தோனி. அதில் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளார். ஆனால் அவர் கேப்டன் பதவியில்லாமல், சாதாரண ஒரு வீரராக ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடியது நேற்றுதான். 

ஏழு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தோனி தேர்வானாலும் இதுவரை ஒருமுறை கூட அவர் ஆட்ட நாயகன் பட்டத்தையோ தொடர் நாயகன் பட்டத்தையோ பெற்றதில்லை. அதேபோல அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்ததில்லை. ஆனால் 2015-ம் ஆண்டில் ரோஹித் சர்மா ஐபிஎல் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

ஏழு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றது பெரிதா அல்லது மூன்றுமுறை கோப்பையை வென்றது பெரிதா? தொடரட்டும் விவாதம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com