அக்வா விளையாட்டுக் கழகம் சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற ஆர்.ராமசாமி நினைவு 49-ஆவது மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி சாம்பியன் ஆனது.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வெங்கடகிருஷ்ணன் உள் விளையாட்டு அரங்கில் 4 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
லீக் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அணி 26-24, 26-24, 25-23 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியனாகியிருக்கும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணிக்கு டெக்ஸ்மோ கோப்பையும், ரூ.40 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டன.
இரண்டாமிடம் பெற்ற சுங்க வரித் துறை அணிக்கு ரூ.35 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற வருமான வரித் துறை அணிக்கு ரூ.30 ஆயிரமும் பரிசளிக்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு அக்வா குழும நிர்வாக இயக்குநர் ஆர்.குமாரவேலு, ஹோமய் குமாரவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாவட்ட வாலிபால் சங்க தலைவர் வெங்கிடுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. மா.சின்னராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்வா குழும நிறுவனங்களின் செயல் இயக்குநர் ரோமித் ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அக்வா பம்ப் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.