அஸ்வின் வரவுக்குப் பிறகு ஹர்பஜன் சிங்கால் இந்திய அணியில் இடம்பெறமுடிவதில்லை. இதனை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார்?
ஆங்கில இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்திய அணி சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் மட்டும் விளையாடக்கூடாது என்று கூறினேன். இந்திய ஆடுகளங்கள் இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனால் முதல் பந்திலிருந்து சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கக்கூடாது என்றேன். ஆனால் இதை அஸ்வினுக்கு எதிராகச் சொன்னதாகப் பலரும் கருதியதால் இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்தேன்.
எனக்கு யார்மீது பொறாமை இல்லை. ஒரு வீரர் விக்கெட்டுகளை எடுத்தாலோ நாட்டுக்காக வெற்றி தேடித்தந்தாலோ எனக்கு என்ன வரப்போகிறது? ஆடுகளம் நியாயமற்ற தன்மையில் இருப்பது குறித்துதான் பேசினேன். இந்த ஆடுகளங்களில் நான் எந்தளவுக்கு விக்கெட்டுகள் எடுப்பேன் எனக் கூறவில்லை. இவை கும்ப்ளேவுக்குக் கிடைத்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார் என்றுதான் கூறினேன்.
அணியில் இன்னொரு ஆஃப் ஸ்பின்னர் இருந்தால் எனக்குப் பிரச்னை இல்லை. இருவரும் சிறந்த பெளலர்கள் என்பதால்தான் நாட்டுக்காக ஆடுகிறோம். அஸ்வின் நன்றாக விளையாடியபோதெல்லாம் நான் பாராட்டியுள்ளேன். எங்களை வைத்து ட்விட்டரில் சர்ச்சை உருவாகியுள்ளது. அதனால் கவலையில்லை. வீரர்களாக எந்த மாதிரியான நட்புறவில் உள்ளோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.