தோனியின் தேர்வு குறித்து தான் கேள்வி எழுப்பவில்லை என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியில் ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை. இதையடுத்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
தோனியால் தற்போது முன்புபோல விரைவாக ரன்கள் சேர்க்கமுடியவில்லை. ஆனால் அவருடைய அனுபவமும் இளம் வீரர்களிடம் அவர் ஏற்படுத்தும் தாக்கமும் அவருடைய தேர்வுக்குக் காரணம் என்றால் என்னாலும் அதுபோன்ற தாக்கத்தை உருவாக்கமுடியும். ஆனால் என்னைத் தேர்வு செய்யவில்லை என்று பேட்டியளித்தார்.
இதையடுத்து தோனிக்கு எதிராக ஹர்பஜன் சிங் பேசியதாகப் பெரிய சர்ச்சை உருவானது. இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்களைச் சாடி பதிவுகள் எழுதியுள்ளார் ஹர்பஜன் சிங். அவர் கூறியதாவது:
ஊடகங்களே, நான் சொல்வதை எப்போதும் தவறாக வெளியிடவேண்டாம். நான் என்ன சொன்னேன் என்று அறியவேண்டும் என்றால் என் பேட்டியை முழுவதுமாகப் பாருங்கள்.
தோனி என்னுடைய நண்பர். அவர் சிறந்த வீரர். அவருடைய தேர்வை நான் எப்போதும் குறைகூற மாட்டேன். எனவே அவருக்கு எதிராக நான் பேசியதாகத் தவறான செய்திகள் வெளியிடவேண்டாம்.
உங்கள் இணையத்தளத்தை நடத்துவதற்காகவும் பரபரப்பான செய்திகளுக்காகவும் நான் சொல்லாததைச் சொன்னதாகச் செய்திகள் வெளியிடவேண்டாம் என்று கூறியுள்ளார்.