விராட் கோலி - கும்ப்ளே இடையே மோதல்? பிசிசிஐயில் பரபரப்பு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை...
விராட் கோலி - கும்ப்ளே இடையே மோதல்? பிசிசிஐயில் பரபரப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வியாழக்கிழமை முதல் வரவேற்றுள்ளது. இதன்மூலம், சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், பிசிசிஐ இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 31-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களிடம் சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, விவிஎஸ்.லக்ஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) நேர்க்காணல் நடத்தும். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பயிற்சியாளர் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அதன் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) கண்காணிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் கும்ப்ளே மீது பிசிசிஐ அதிருப்தி கொண்டிருப்பதால் அவருக்கு பிசிசிஐ பதவி நீட்டிப்பு வழங்கவில்லை என்று முதலில் கூறப்பட்டது. வீரர்களுக்கான ஒப்பந்த ஊதியம் மற்றும் தனது ஊதியத்தை அதிகளவு உயர்த்தித் தருமாறு அனில் கும்ப்ளே கேட்டுவருவதால் அவர் மீது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, இந்த சீசனில் உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 13 ஆட்டங்களில் 10 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. 2 ஆட்டங்கள் சமன் ஆகின. அதேபோல், மேற்கிந்தியத் தீவுகளிலும் ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. எனினும், வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த உயர்வு உள்ளிட்ட அவரது பல்வேறு கோரிக்கைகள் பிசிசிஐ நிர்வாகத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது.  இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனில் கும்ப்ளே தனக்காகவும், அணியின் வீரர்களுக்காகவும் பேரம் பேசி வருகிறார். இது ஏற்புடையது என்றாலும், நாளை அவருக்குப் பதில் வேறு ஒருவரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்யும் பட்சத்தில், அவர் பேரம் பேசும் நிலையில் இருக்க மாட்டார். அவரது சில கோரிக்கைகள் விவரிக்க இயலாத வகையில் இருக்கின்றன' என்றார். ஒரு கேப்டனாக கோலிக்கு கூடுதல் பொறுப்புகள் இருப்பதால், அவருக்கான ஊதியத்தை 25 சதவீதம் அதிகரிப்பது, தலைமைப் பயிற்சியாளர் என்ற முறையில் தேர்வுக் குழுவிலும் தன்னை உறுப்பினராக்குவது என்பது போன்ற கும்ப்ளேவின் கோரிக்கைகள் பிசிசிஐ நிர்வாகத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தேர்வுக் குழுவில் தன்னை உறுப்பினராக்குவது என்ற அவரது கோரிக்கை, ஒரு தேர்வுக் குழுவில் 3 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்ற லோதா குழு விதிகளுக்கு முரண்பட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கோலி - கும்ப்ளே இடையே மோதல் எழுந்ததுதான் அவர் மீதான அதிருப்திக்கு முக்கியக் காரணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது கடைசி டெஸ்டில் கோலி - கும்ப்ளே இடையே மிகப்பெரிய கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கோலிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவைத் தேர்வு செய்யவேண்டும் என்று கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். இதற்கு கோலி மறுப்பு தெரிவிக்க, இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வலுவான கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடைசியில் கும்ப்ளே சொன்ன, குல்தீப் யாதவையே இந்திய அணி தேர்வு செய்தது. 

இதனால் கும்ப்ளேவுக்குப் பதிலாக வேறொருவரைப் பயிற்சியாளராக நியமிக்கலாம் என கோலி அபிப்ராயப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்த அறிக்கையை பிசிசிஐ வெளியிட்டது. வீரேந்திர சேவாக்கை இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்தபோதிலும் அவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ரவி சாஸ்திரியையே பயிற்சியாளராக நியமிக்கலாம் என கோலி விருப்பபடுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

நடப்பதைப் பார்க்கும்போது சாம்பியன் டிராபி போட்டிக்குப் பிறகு இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com