இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தில்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
2-ஆவது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த போட்டியுடன் ஓய்வு பெற்ற ஆஷிஷ் நெஹ்ராவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அறிமுகம் செய்யப்பட்டார்.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. மார்டின் கப்டில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
மற்றொரு துவக்க வீரரான காலின் முன்ரோ சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 58 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். சர்வதேச டி20 போட்டிகளில் இது அவருக்கு இரண்டாவது சதமாகும்.
பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 12 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த டாம் ப்ரூஸ் 2 பவுண்டரிகளை விரட்டி 18* ரன்கள் சேர்த்தார்.
இதனால் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் குவித்தது.
இந்திய தரப்பில் அறிமுக வீரர் சிராஜ் மற்றும் சாஹல் தலா 1 விக்கெட் எடுத்தனர். புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் சிக்கனமாக பந்துவீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினர்.