புணே ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சாகேத் மைனேனிக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவில் "வைல்ட் கார்டு' வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்கிறார்.
அவரோடு, ஸ்ரீராம் பாலாஜி, ஆர்யன் கோவேஸ், அர்ஜூன் காதே ஆகியோருக்கும் வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வியத்நாம் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சாகேத் மைனேனி, காயம் காரணமாக 2017 சீசனின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்காததால் தரவரிசையில் 912-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் 140-ஆவது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி, 148-ஆவது இடத்தில் இருக்கும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் ஆவர். கடந்த சீசனில் "ரன்னர்-அப்'ஆக வந்த பிரஜனேஷ் கன்னேஸ்வரனும் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்கிறார். இதனிடையே, சர்வதேச தரவரிசையில் 98-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்லோவேனியாவின் பிளாஸ் காவ்சிச், 86-ஆவது இடத்தில் இருக்கும் மால்டோவாவின் ராடு அல்போட் ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
புணே ஓபன் தகுதிச்சுற்று ஆட்டங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. பிரதான சுற்றுகள் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.