நாட்டறம்பள்ளியில் மாநில அளவிலான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் கோயம்புத்தூர் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட கபடி கழகங்கள் இணைந்து மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நாட்டறம்பள்ளியில் கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாள்கள் நடைபெற்றது.
இதில் திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், தருமபுரி, சென்னை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளை தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொதுச் செயலாளர் ஷபியுல்லா, மாநிலத் தலைவர் சோலைராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கோயம்புத்தூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும், முதல் பரிசு தொகையான ரூ. 50 ஆயிரத்தையும் பெற்றது. ஆண்களுக்கான போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 50 ஆயிரத்தைப் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத் தலைவர் சோலை ராஜா தலைமை வகித்தார். சாமூண்டிஸ்வரி அம்மன் கபடி கழகத் தலைவர் அமுதவாணன், செயலாளர் மணி, பொருளாளர் சிவாஜி, இணைச் செயலாளர்கள் ரமேஷ், கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகத் தலைவர் குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் ஷபியுல்லா, நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தலிங்கம், வேலூர் மாவட்ட கபடி கழகச் செயலாளர் கோபாலன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
கபடி கழக நிர்வாகிகள் சரவணன், சம்மந்தமூர்த்தி, சம்பத், அருண்குமார், செந்தில்குமார், பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.