இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சண்டிமல் 57 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 4, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், 3-ஆவது வரிசையில் இறங்கிய புஜாராவுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய் சிறப்பாக ஆடி சதமடித்து 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 209 ரன்கள் சேர்த்தது.
பின்னர் புஜாராவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். மறுமுனையில் நங்கூரமாய் நின்ற புஜாரா 143 ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ரஹானே 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி வரும் கோலி 170 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 507 ரன்களைக் குவித்துள்ளது. இதனால் இலங்கையை விட 302 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.