இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்தொடரை இந்திய அணி 4-1 என்கிற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் எனப்படும் எதிரணி வீரர்களுடனான வாக்குவாதத்தில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. கடந்தமுறை டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்கு வந்தபோது இரு அணிகள் இடையே பகைமை உணர்வு உண்டானது. கோலி - ஸ்மித் இடையே பலமான வாக்குவாதங்கள் களத்துக்கு வெளியேயும் ஏற்பட்டன. ஆனால் ஒருநாள் தொடரில் அதுபோல சொல்லிக்கொள்வதுபோன்ற மாதிரியான அசாதாரண சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
வேறொன்றுமில்லை. ஐபிஎல் தான் இதற்குக் காரணம் என்கிறார் சேவாக்.
அவர் மேலும் கூறியதாவது: ஆஸி. வீரர்கள் வாக்குவாதத்திலும் சண்டைச் சச்சரவிலும் ஈடுபடாததற்குக் காரணம், அடுத்த வருடம் நடைபெறுகிற மெகா ஐபிஎல் ஏலம்தான். அதை முன்வைத்து இந்திய வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அவர்கள் அச்சம் கொண்டார்கள். இந்திய வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தால் ஆஸ்திரேலிய வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய ஐபிஎல் உரிமையாளர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள். எனவே அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.