பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டிக்கான ஏலம் ஹைதராபாதில் நேற்று நடைபெற்றது.
அதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால், முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் ஆகியோரை அவர்களுடைய பழைய அணிகள் தக்கவைத்துக் கொண்டன. சிந்து, சாய்னா ஆகியோருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை, இப்போது 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு சிந்துவுக்கு ரூ. 48.75 லட்சமும், சாய்னாவுக்கு ரூ. 41.25 லட்சமும் கிடைக்கும். சிந்து, சென்னை ஸ்மாஷர் அணியிலும், சாய்னா, அவாதே வாரியர்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். கடந்த வருட ஏலத்தில் சிந்துவுக்கு ரூ. 39 லட்சம் கிடைத்தது.
சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன். இந்த ஏலம் குறித்து அவர் கூறியதாவது: ஆரம்பத்திலிருந்தே எங்கள் அணியின் மையப்புள்ளி, சிந்துதான். எனவே அவரை நாங்கள் தக்கவைத்துக்கொண்டோம். சிந்துவை முன்வைத்து எங்களுடைய திட்டத்தைத் தீட்டினாலும் இளைய வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் அளிப்போம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தில்லியில் நடைபெற்ற 2-வது பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, 4-3 என்ற கணக்கில் மும்பை ராக்கெட்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டி ஜனவரி 1-ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி ஏஸர்ஸ், லக்னோ வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
பி.வி. சிந்து, தற்போது உலகின் அசைக்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சீன ஓபன், இந்திய ஓபன், கொரிய ஓபன் ஆகிய சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.