கல் வீச்சு சம்பவம் எதிரொலி: ஆஸ்திரேலிய வீரர்களிடம் வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் ரசிகர்கள்!

இதுபோன்ற செயல்களை அஸ்ஸாம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தவறிழைத்தவர்கள்...
கல் வீச்சு சம்பவம் எதிரொலி: ஆஸ்திரேலிய வீரர்களிடம் வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் ரசிகர்கள்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டி20 ஆட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. எனினும் அந்த இடத்தில் வீரர்கள் யாரும் அமராததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது: குவாஹாட்டி சிறந்த விளையாட்டு நகராக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதன் புகழை அழிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பஸ் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செயல்களை அஸ்ஸாம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். 
அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க செயலர் பிரதீப் புர்ராகோஹைன் கூறுகையில், 'நாங்கள் எப்போதுமே உயர்மட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறோம். அதையும் தாண்டி இந்த சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை. கல் வீச்சு சம்பவம், வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே நடந்திருக்கிறது. இது நெரிசலான சாலையும் கிடையாது. கல்வீச்சு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கிறேன்' என்றார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் முன்பு ஸாரி என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் ஏந்தி கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். அதேபோல விமான நிலையத்திலும் ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கும் விதமாக பதாகைகளை ஏந்தி நின்றுகொண்டிருந்தார்கள். ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையத்துக்குப் பேருந்தில் வந்த ஆஸி. வீரர்களிடம் ஸாரி... ஸாரி... என உரக்கக் கத்தியும் ரசிகர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா கூறியதாவது: குவஹாட்டி ரசிகர்கள் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். குவஹாட்டிக்கு அதிகமாகக் கிரிக்கெட் போட்டிகள் கிடைக்காது. ஒரே ஒருவர் செய்த தவறால் மற்ற கிரிக்கெட் ரசிகர்களைச் சிரமப்பட வைத்துள்ளார். மிகவும் வருத்தம் அளிக்கக்கூடியது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com