நூறு வருடங்ளுக்கு முன்பு, அதாவது 1800களில் மூன்று நாள், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. உலக லெவன் அணியுடன் ஆஸ்திரேலிய 2005-ல் விளையாடிய டெஸ்ட் போட்டி, 6 நாள் டெஸ்டாக விளையாடப்பட்டது. அதற்கு அதிகாரபூர்வ அந்தஸ்தும் அளித்தது ஐசிசி (ஆனால் அந்த டெஸ்ட் போட்டி நான்கு நாளில் முடிவுபெற்றது.). பல வீரர்கள் 4 நாள் டெஸ்ட் போட்டியை ஐசிசிக்குப் பரிந்துரை செய்துள்ளார்கள். இதனால் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பது பலருடைய கணிப்பு.
இதை அமல்படுத்த முன்வந்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம். டிசம்பர் இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் 4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்தவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. இது பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும்.
இந்திய அணியால் பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்கமுடியாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2004-05-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடாததால் இதற்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு ஐசிசி அதிகாரபூர்வ அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. 2019 உலகக் கோப்பை போட்டி வரை 4 நாள் டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐசிசி அனுமதி தந்துள்ளது.
இந்தப் புதிய நடைமுறை, சிறிய நாடுகள் டெஸ்ட் போட்டியில் விளையாட உதவும் என்று ஐசிசி தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.