இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராகத் திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.
ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்களுக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படவில்லை.
தொடர் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வு அளிக்கவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் நடந்த ஒருநாள்
போட்டிகளில் ஜடேஜா சரிவர சோபிக்கவில்லை என்பதே உண்மை.
இதனிடையே இந்திய அணிக்கு தேர்வான இளம் வீரர்களான அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், சாஹல் போன்றோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தங்களுக்கு தரப்படும் வாய்ப்புகளையும் சரிவர பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை போட்டித் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா இரட்டைச் சதம் விளாசியது மட்டுமல்லாமல் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சௌராஷ்டிர அணியை வெற்றிபெற வைத்தார்.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிர அணி இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை இமாலய வெற்றிபெற்றது.
இப்போட்டியில் தனது உள்ளூர் அணியான சௌராஷ்டிரா ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து திணறிய போது களத்தில் இறங்கிய ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார்.
மொத்தம் 313 பந்துகளைச் சந்தித்து 23 பவுண்டரி மற்றும் 2 இமாலய சிக்ஸர்களுடன் 201 ரன்கள் விளாசினார். அதுபோல பந்துவீச்சில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளையும் அள்ளினார்.