மும்பை: எனது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா பெயரில் செயல்படும் போலி டிவிட்டர் கணக்குகளை உடனடியாக நீக்குங்கள் என்று பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டருக்கு, சச்சின் டெண்டுல்கர் மீண்டும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். இவரது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா. இதில் அர்ஜுன் அவரது தந்தையைப் போன்றே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி, தற்பொழுது வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார். மகள் சாரா நடிப்பில் ஆர்வம் காட்டி, அதற்கென பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2014-ஆம் ஆண்டின் மத்தியிலேயே அர்ஜுன் மற்றும் சாரா இருவரது பெயரிலும் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் கணக்குகள் துவங்கப்பட்டு, ட்வீட்டுகள் வெளிவந்தன. ஆனால் சச்சின் உடனடியாக அவற்றை மறுத்ததோடு, அவை போலி கணக்குகள் என்றும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் டிவிட்டருக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவை அப்பொழுது நீக்கப்படவில்லை.
இந்நிலையில் சச்சின் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர், 'எனது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா டிவிட்டரில் இல்லை என்பதனை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிவிட்டருக்கு நாங்கள் மீண்டும் வேண்டுகோள் வீடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு ட்வீட்டில், 'இத்தகைய போலி கணக்குகளால் பெரும் பாதிப்பு உண்டாகிறது. நிறைய தவறான புரிதல்கள் உண்டாகிறது. இதன் விளைவுகள் எங்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது' என்று பதிவிட்டு தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.