தமிழகம்-திரிபுரா இடையிலான ரஞ்சி கிரிக்கெட் ஆட்டம் டிராவில் முடிந்தது.
சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திரிபுரா அணி 96.1 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் எஸ்.கே.படேல் 99, யஷ்பால் சிங் 96 ரன்கள் குவித்தனர். தமிழகம் தரப்பில் விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய தமிழக அணியில் அபிநவ் முகுந்த் 76, வாஷிங்டன் சுந்தர் 159 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழகம் 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்திருந்தது. இந்திரஜித் 89, அஸ்வின் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
கடைசி நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக அணி மூன்றாவது நாள் எடுத்திருந்த ரன்களோடு டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய திரிபுரா அணி 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக 4-ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. திரிபுராவுக்கு ஒரு புள்ளி கிடைத்தது.