மும்பை பந்துவீச்சைத் திணறடித்த யோ மகேஷ் & இந்திரஜித்!

மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழகப் பந்துவீச்சாளர் யோ மகேஷ் அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார்...
மும்பை பந்துவீச்சைத் திணறடித்த யோ மகேஷ் & இந்திரஜித்!

மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழகப் பந்துவீச்சாளர் யோ மகேஷ் அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இதனால் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி, 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

மும்பையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 123 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும் எடுத்தார்கள். தமிழகத் தரப்பில் விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழக அணி, 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திரஜித் 105 ரன்களுடனும் அஸ்வின் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் அஸ்வின், 13 ரன்களுடன் தவல் குல்கர்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஜெகதீசன் 21 ரன்களில் கோஹில் பந்துவீச்சில் வெளியேறினார். வேகப்பந்து வீச்சாளர் யோ மகேஷ் பொறுப்பாக விளையாடி இந்திரஜித்துக்கு நல்ல துணையாக விளங்கினார். 237 பந்துகளில் 150 ரன்களை எட்டினார் இந்திரஜித். இரட்டைச் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 152 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மதிய உணவு இடைவேளையின்போது தமிழக அணி 8 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற இன்னும் 29 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது.

ஆனால் தமிழக பந்துவீச்சாளர் யோ மகேஷ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மும்பை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவருக்கு இணையாக ரஹில் ஷாவும் பொறுமையாக விளையாடி விக்கெட்டைத் தக்கவைத்துக்கொண்டார்.  அரை சதம் எடுத்த யோ மகேஷ் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவினார். கடைசிக்கட்டத்தில் சொற்ப ரன்களில் முன்னிலை பெறமுடியாமல் போய்விடுமோ என தமிழக அணி பயந்துகொண்டிருந்தபோது யோ மகேஷின் பேட்டிங், ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளது. 

முதல் 50 ரன்களை 139 பந்துகளில் எடுத்த யோ மகேஷ் அதன்பிறகு விரைவாக ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சாளராக இருந்தாலும் நெருக்கடியான தருணத்தில் 104 பந்துகளை எதிர்கொண்ட  ரஹில் ஷா, 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது தமிழக அணியின் ஸ்கோர் - 411. கடைசியாக விளையாட வந்த கே. விக்னேஷும் ரன்கள் எடுத்து மும்பை பந்துவீச்சாளர்களை மேலும் வெறுப்பேற்றினார். தமிழக அணிக்குப் பலமாக விளங்கிய யோ மகேஷ், 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 216 பந்துகளில் சதமெடுத்து அசத்தினார். கடைசியில் துமல் பந்துவீச்சில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார் கே. விக்னேஷ். இதனுடன் தமிழக அணியின் அமர்க்களமான முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தது.

முதல் இன்னிங்ஸில் எதிர்பாராதவிதமாக 76 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழக அணி 450 ரன்கள் எடுத்தது. மும்பைத் தரப்பில் மும்பை டி கோஹில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த மும்பை அணி, 3-ம் நாள் முடிவில் 22 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள், அகில் 24 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்கள். தற்போது அந்த அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தமிழக அணி முன்னதாக ஆந்திரம் மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தைச் சமன் செய்ததன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெறாத தமிழக அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com