10 நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்துக்கு இறங்கினார். தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், முதலிடத்துக்கு முன்னேறினார்.
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இரு சதங்கள் அடித்த விராட் கோலி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இத்தொடரில் 263 ரன்கள் எடுத்த கோலி, ஒருநாள் தரவரிசையில் முதல்முறையாக 889 புள்ளிகள் எடுத்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் யாரும் எட்டாத உயரம் இது. இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 1998-ல் 887 புள்ளிகள் பெற்றதே இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் பெற்ற அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது. அதை கோலி முறியடித்துள்ளார். ரோஹித் சர்மா, 7-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஹசன் அலி முதல் இடத்தில் உள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பூம்ரா, ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, ஒருநாள் போட்டியில் 2-ம் இடத்தில் உள்ளது. டி20 தரவரிசையில் 5-ம் இடம் பெற்றுள்ளது.