10.
சச்சின் சட்டையில் பொறிக்கப்பட்ட எண். இதனால் இந்த எண் சச்சின் ரசிகர்களுக்கும் பிடித்தமானது.
தற்போது இந்த எண் இன்னொரு வீரருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான 4-வது கிரிக்கெட் போட்டியில் ஷர்துல் தாக்குர் அறிமுகமானார். அவருக்கு சச்சினின் 10-ம் எண்ணை ஒதுக்கியிருந்தது பிசிசிஐ. அவரும் அந்த எண் கொண்ட சட்டையை அணிந்திருந்தார்.
இதுதான் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சச்சினின் பிரத்யேக எண்ணான 10-ஐ இன்னொரு வீரருக்கு ஒதுக்கக்கூடாது என்று சச்சின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் இதுகுறித்த ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் ஷர்துல் தாக்குருக்கு 10-ம் எண் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
ஆகாஷ் சோப்ரா இதுபற்றி கூறியதாவது: இதில் என்ன தவறு உள்ளது எனத் தெரியவில்லை. தனக்கான எண்ணைத் தேர்வு செய்ய ஷர்துல் தாக்குருக்கு உரிமை உண்டு. எனவே அவர் அந்த எண்ணைத் தேர்வு செய்துள்ளார். இதற்காக அவரை ஏன் கிண்டலடிக்கவேண்டும்? என்று கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் கூறியதாவது: அந்த எண் கொண்ட சட்டையை அணிந்தால் என்ன தவறு? சச்சினுக்கான ஷர்துல் தாக்குரின் சமர்ப்பணமாகவும் அதை எடுத்துக்கொள்ளலாம். 10 என்பது ஷர்துலின் ராசியான எண்ணாகவும் இருக்கலாம். அந்த எண் கொண்ட சட்டையை இன்னொருவர் அணிவதில் சச்சினுக்கும் கூடப் பிரச்னை எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார்.
சரி, இந்த எண்ணை ஷர்துல் தாக்குர் தேர்வு செய்யக் காரணம் என்ன?
என் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகை 10. (1991-ம் வருடம் அக்டோபர் 16-ம் தேதி பிறந்துள்ளார். 16+10+1991). எனவே அந்த எண்ணைத் தேர்வு செய்துள்ளேன் எனப் பதில் அளித்துள்ளார் ஷர்துல் தாக்குர்.
சச்சினைப் போலவே ஷர்துலும் மும்பையைச் சேர்ந்தவர். சச்சினை எஸ்டி எனச் சுருக்கமாகக் கூறவதுபோல ஷர்துல் தாக்குரையும் அதேபோல கூறமுடியும்.