வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தார். 4 இணையமைச்சர்கள், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
விஜய் கோயலிடம் இருந்த விளையாட்டுத் துறை, ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விளையாட்டுத் துறைக்கு முதல்முறையாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஆகியுள்ளார். துப்பாக்கிச் சுடுதல் வீரரான ராத்தோர், 2004 ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்தார். காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.
இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ராத்தோர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியிருப்பது குறித்து விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் சமூகவலைத்தளங்கள் வழியாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ட்விட்டர் பக்கத்தில் அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்து ராத்தோர் கூறியதாவது: விளையாட்டு வீரர்கள் இந்நாட்டின் முதல் குடிமகன்கள். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் என்னுடைய துறை சார்பாக அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.