இடைக்கால 'ஓய்வு' கேட்கும் ஷகிப்-அல்-ஹசன்...! 

வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் ஷகிப்-அல்-ஹசன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் இடைக்கால ஓய்வு வேண்டியுள்ளார்.
இடைக்கால 'ஓய்வு' கேட்கும் ஷகிப்-அல்-ஹசன்...! 

வங்கதேசத்தின் நட்சத்திர வீரராகவும், உலகின் முதல்நிலை ஆல்-ரவுண்டராகவும் இருப்பவர் ஷகிப்-அல்-ஹசன். இவர், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் சிறிது காலத்துக்கு தனக்கு ஓய்வு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி சமீபகாலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. உலகின் முன்னணி அணிகளுக்கு கடும் சவால் அளித்து வருகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அந்த அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. மேலும், தொடரை 1-1 என சமன் செய்தது. 

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் முதல்தர அணியை வங்கதேசம் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து அந்த அணி 2 டெஸ்ட் போட்டித் தொடர்களில் பங்கேற்கிறது.

அதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனக்கு 6 மாத காலத்துக்கு ஓய்வு தேவை என ஷகிப்-அல்-ஹசன் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தார்.

அதில் அவர் கூறியதாவது,

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இதனால் எனது உடலும், மனதும் மிகவும் சோர்ந்துள்ளது. எனவே அதிலிருந்து விடுபடவும், எனது எதிர்காலத்தை சரியாக திட்டமிடும் விதத்தில் எனக்கு 6 மாதங்கள் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து ஓய்வு தேவை என்றிருந்தது.

இருப்பினும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என்றார். இதுகுறித்து பரிசீலித்து வருவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com