புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸுக்கு 7-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 73-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸுக்கு எதிராக பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. 
தெலுகு டைட்டன்ஸ் ரைடரை சுற்றி வளைக்கும் பெங்கால் வாரியர்ஸ் அணியினர்.
தெலுகு டைட்டன்ஸ் ரைடரை சுற்றி வளைக்கும் பெங்கால் வாரியர்ஸ் அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 73-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸுக்கு எதிராக பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. 
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த பெங்கால் வாரியர்ஸ் அணி, பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அசத்தலாக ஆடி வெற்றி கண்டது. இந்த சீசனில் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்கால் அணி 7-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலம் சோன்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களின் முதல் ரைடின் மூலம் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. 4-ஆவது நிமிடத்தில் தெலுகு டைட்டன்ஸ் வீரர் நிலேஷ் சலுங்கே இரு புள்ளிகளைப் பெற, இரு அணிகளும் 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. 
தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு டேக்கிள் மூலம் இரு புள்ளிகள் கிடைக்க, அந்த அணி 6-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் 10 நிமிடங்களின் முடிவில் தெலுகு டைட்டன்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 13-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 9-9 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன்பிறகு பெங்கால் அணியை ஆல் அவுட்டாக்கிய தெலுகு டைட்டன்ஸ் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 15-12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே 3 புள்ளிகளைக் கைப்பற்றிய பெங்கால் வாரியர்ஸ் அணி, ஸ்கோரை சமன் செய்தது. ஆனால் 25-ஆவது நிமிடத்தில் 18-16 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது தெலுகு டைட்டன்ஸ். தொடர்ந்து அபாரமாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணி, நிலேஷ் சலுங்கேவின் சூப்பர் ரைடால் 32-ஆவது நிமிடத்தில் 27-19 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 
இதன்பிறகு பெங்கால் வாரியர்ஸ் அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட்டாக்கிய தெலுகு டைட்டன்ஸ் அணி 30-20 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசிக் கட்டத்தில் அபாரமாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் தொடர்ச்சியாக 5 புள்ளிகளைப் பெற, இரு அணிகள் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-30 என்ற நிலையில் இருந்தது. 
தொடர்ந்து நம்பிக்கையோடு ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு, கடைசி விநாடியில் குன் லீ ஒரு புள்ளியைப் பெற்றுத்தர, அந்த அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. கடைசி 7 நிமிடங்களில் தெலுகு டைட்டன்ஸ் அணி ஒரு புள்ளியை மட்டுமே பெற்றது. இதுவே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள தெலுகு டைட்டன்ஸ் அணி 10-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. 
பெங்கால் தரப்பில் குன் லீ 9 புள்ளிகளையும், மணீந்தர் சிங் 7 புள்ளிகளையும் கைப்பற்றினர். 
இன்றைய ஆட்டங்கள்
தமிழ் தலைவாஸ்-யு.பி.யோதா
நேரம்: இரவு 8
ஹரியாணா ஸ்டீலர்ஸ்-
புணேரி பால்டான்
நேரம்: இரவு 9
இடம்: சோன்பட்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com