இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு பயனளிப்பதோடு, எனது திறனை மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது என்று இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஓய்வில் இருந்த ஸ்ரீஜேஷ், பெங்களூரு 'சாய்' மையத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். இந்த நிலையில் அவர் மேலும் கூறியதாவது:
இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதையும், அவர்களுடைய ஆட்டம் குறித்த பின்னூட்டத்தை அவர்களிடம் தெரிவிப்பதையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். அது எனது ஆட்டத்தையும் மேம்படுத்த உதவுகிறது. நானும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறேன். நான் மீண்டும் களத்திற்கு திரும்புகிறபோது எந்த விஷயத்தில் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெரியும் என்றார்.
தேசிய பயிற்சி முகாமில் உள்ள இளம் வீரர்களுக்கு ஸ்ரீஜேஷ் உதவி வருகிறார். அதன் காரணமாக ஆகாஷ் சிக்டே, சூரஜ் கர்கெரா போன்ற இளம் கோல் கீப்பர்கள் பயனடைந்திருக்கிறார்கள். காயம் காரணமாக அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி, உலக ஹாக்கி லீக் அரையிறுதி ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்த ஸ்ரீஜேஷ், சர்வதேசப் போட்டியில் மீண்டும் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறார்.
அது குறித்து அவர் கூறுகையில், 'மீண்டும் தேசிய பயிற்சி முகாமுக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சகவீரர்களுடன் இணைந்து எளிய பயிற்சிகளை தொடங்கியிருக்கிறேன். நாம் அணியிருடன் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைப்பதற்கான உத்வேகம் கிடைக்கும். அதன்மூலம் விரைவாக அணிக்குத் திரும்பிவிடலாம்.
புதிய பயிற்சியாளரான ஜோர்ட் மரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி புதிய பாதையில் பயணிக்கும். தரவரிசையில் முன்னேறும் அதேவேளையில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும். நான் உள்பட இங்குள்ள அனைத்து வீரர்களும் புதிய பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் கடுமையாக உழைக்கவும், வெற்றிகளை குவிக்கவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்' என்றார்.
புதிய பயிற்சியாளர் வரும் 20-ஆம் தேதி இந்திய அணியுடன் இணைகிறார்.